உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சென்னை- மாநெல்லுார் சிப்காட் 4 வழிச்சாலை திட்டம் நிதி ஒதுக்கீடு! :எஞ்சிய இருவழிச்சாலையும் ரூ. 25 கோடியில் விரிவாக்கம்

சென்னை- மாநெல்லுார் சிப்காட் 4 வழிச்சாலை திட்டம் நிதி ஒதுக்கீடு! :எஞ்சிய இருவழிச்சாலையும் ரூ. 25 கோடியில் விரிவாக்கம்

கும்மிடிப்பூண்டி:தொழிற்சாலைகளுக்கான போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து மாநெல்லுார் சிப்காட் வரை நான்கு வழிச்சாலை வசதி ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, எஞ்சி இருந்த, 4 கி.மீ., துாரமுள்ள இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற, 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில், கும்மிடிப்பூண்டி, தேர்வாய்கண்டிகை தொடர்ந்து, மாநெல்லுார் சிப்காட் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் தற்போது இடம் இல்லாத காரணத்தால், அரசு புறம்போக்கு நிலங்கள் அதிக அளவில் உள்ள மாதர்பாக்கம் பகுதியில் புதியதாக மாநெல்லுார் சிப்காட் திட்டத்தை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. மூன்று கட்டங்களாக நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக மாநெல்லுார், வாணியமல்லி, மாதர்பாக்கம், சாணாபுதுார், சூரப்பூண்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 4,385 ஏக்கர் நிலங்கள் எடுக்கப்பட உள்ளன. அவற்றில், 2000 ஏக்கர் நிலங்கள், புறம்போக்கு நிலங்களாகும்.பொதுவாக சிப்காட் வளாகத்தில் தொழில் துவங்க வரும் நிறுவனங்கள், சாலை வசதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அதனால் தொழில் முனைவோரை ஈர்க்கும் வகையில், சென்னையில் இருந்து மாநெல்லுார் சிப்காட் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றிய பின் மாநெல்லுார் சிப்காட் திட்டத்தை துவக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் கவரைப்பேட்டையில் இருந்து சத்தியவேடு நோக்கி செல்லும் சாலை வழியாக மாநெல்லுார் சிப்காட் வளாகத்தை அணுகும் திட்டம் தயாரிக்கப்பட்டது.முதல் கட்டமாக, கவரைப்பேட்டையில் இருந்து திடீர் நகர் வரையிலான, 10 கி. மீ., துார இருவழிச்சாலை, 72 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. தொடர்ந்து அதே சாலையில், வாணியமல்லியில் இருந்து மாநெல்லுார் சிப்காட் வரை, 54.41 கோடி ரூபாய் செலவில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது, கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், திடீர் நகர் முதல் வாணியமல்லி வரையிலான, 4 கி.மீ., சாலை, இருவழிச்சாலையாக உள்ளது. எஞ்சியிருந்த அந்த சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநெல்லுார் சிப்காட் சாலை வசதிக்காக மொத்தம், 151.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் இருந்து மாநெல்லுார் சிப்காட் வரையிலான சாலை முழுதும், நான்கு வழிச்சாலையாக மாற உள்ளது.இது குறித்து நெடுஞ்சாலை துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:திடீர் நகர் முதல் வாணியமல்லி வரை, 25 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசாணை வெளியானது. விரைவில் திட்ட மதிப்பீடு தயாரித்து டெண்டர் விடப்படும். அடுத்த மூன்று மாத காலத்திற்குள் பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு

சென்னையில் இருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகத்திற்கு செல்லும் சாலையில், பெரியபாளையம் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், மாநெல்லுார் சிப்காட் திட்டம் துவங்குவதற்கு முன், சிறப்பான சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மாநெல்லுார் சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலை முனைவோர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை