சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை அகலப்பணி விறுவிறு
திருவள்ளூர்: சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருநின்றவூர் -- ரேணிகுண்டா வரை, 124 கி.மீ., துாரம் ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி, கடந்த 2011ல், துவங்கியது. ஆந்திர மாநிலம், புத்துார் -- ரேணிகுண்டா வரை, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் -- புத்துார் வரை, இருவழிச் சாலையாக மட்டும் மாற்றப்பட்டது. திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் வரை பணி கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்தாண்டு இப்பணி துவக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், திருவள்ளூர் -- திருத்தணி வரை நான்கு வழிச்சாலை அமைக்க, சாலையின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை துறை நிலம் கையகப்படுத்தி, எல்லை கற்கள் நடப்பட்டன. இப்பகுதியில், சாலை அகலப்படுத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. கனகம்மாசத்திரத்தில் இருந்து திருத்தணி வரை, சாலை அகலப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.