புதிதாக தீயணைப்பு நிலையம் பூந்தமல்லியில் முதல்வர் திறப்பு
பூந்தமல்லி, :பூந்தமல்லி, குமணன்சாவடியில் உள்ள தீயணைப்பு நிலையம் 1997ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்கு, ஒரு நிலைய அலுவலர், 28 தீயணைப்பு வீரர்கள் பணியில் உள்ளனர். இந்த அலுவலகம் போதிய இடவசதி இல்லாமல், சிமென்ட் ஷீட்களால் ஆன சிறிய கட்டடத்தில் இயங்கியதால், தீயணைப்பு வீரர்கள் அவதிக்குள்ளாகினர்.தேவையான வசதிகளுடன் தீயணைப்பு நிலையம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, பூந்தமல்லி, குமணன்சாவடியில் இருந்து வேலப்பன்சாவடி செல்லும் சாலையில், அரசு கருவூலம் அருகே 1.19 கோடி ரூபாய் மதிப்பில், நிலைய அலுவலர் அறை, ஓய்வறை, வாகன நிறுத்தும் இடத்துடன் கூடிய புதிய தீயணைப்பு நிலையம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை, நேற்று முன்தினம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிய கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வந்தது.