சோழவரத்தில் சிறுவன் மாயம் உறவினர்கள் சாலை மறியல்
சோழவரம்:சோழவரம் அடுத்த, சிவந்தி ஆதித்தன் நகரை சேர்ந்தவர் மகேந்திரன், 32. கூலித்தொழிலாளி. இவரது மகன் லோகேஷ்குமார், 8. பம்மதுகுளம் அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் சிறுவனை பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.இந்நிலையில், நேற்று மாலை, காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்துதர வலியுறுத்தி, செங்குன்றம் - திருவள்ளூர் சாலையில் உள்ள பெத்தேரி போலீஸ் பூத் அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து, சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.