காக்களூர் ஏரிக்கரை கான்கிரீட் தளம் தரமாக அமைக்க கலெக்டர் உத்தரவு
காக்களூர்: காக்களூர் ஏரியில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் நடைபாதை தளத்தை பார்வையிட்ட கலெக்டர், பணியை தரமாக அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருவள்ளூர் நகராட்சி, காக்களூர் ஊராட்சியில் உள்ள ஏரி மற்றும் தாமரைக்குளம் ஆகிய இரண்டும், 2.27 கோடி ரூபாய் மதிப்பில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, காக்களூர் ஊராட்சி மற்றும் திருவள்ளூர் நகராட்சி எல்லையில், 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரி மற்றும் தாமரைக்குளத்தை, 2.27 கோடியில் மேம்படுத்தி நடைபாதை, மின் விளக்குகள், இருக்கை உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. காக்களூர் ஏரியில் நடைபாதை பணிக்காக, கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்பணியை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு செய்தார். பின், அப்பணியை தரமாகவும், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு, ஊரக வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.