மாநில அளவில் முதலிடம் பிடித்த இரு மாணவர்களுக்கு பாராட்டு
பள்ளிப்பட்டு: மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், குழந்தைகள் தின விழாவில் கவுரவிக்கப்பட்டனர். பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் டில்லி கணேஷ், அருள்குமரன் ஆகியோர், வினாடி - வினா போட்டி யில், மாநில அளவில் முதல் பரிசு பெற்றனர். பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி கோவையில் மாநில அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற டில்லி கணேஷ் மற்றும் அருள் குமரன், ஆறு சுற்றுகள் கொண்ட போட்டியில், 240 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியின் பெயரை முன்னிலை படுத்திய மாணவர்களுக்கு, நேற்று குழந்தைகள் தின விழாவில் பாராட்டு விழா நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் ஜோதி, மாணவர்களை பாராட்டி கவுரவித்தார். குழந்தைகள் தின விழாவை ஒட்டி, நேற்று மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியர்கள் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.