இருளர்களுக்கு கட்டும் வீடுகள் 2 மாதங்களாக பணிகள் நிறுத்தம்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் கிராமத்தில், 20க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், வெள்ளைகுட்டை அருகே கூரை அமைத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வேண்டி, திருத்தணி ஆர்.டி.ஓ.,விடம் விண்ணப்பித்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தொழுதாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மருதவல்லிபுரம் கிராமத்தில், சர்வே எண். 33/2ல் அனாதினம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில், 15 பேருக்கு 2 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. மார்ச் மாதம் வீடு இல்லாத இருளருக்கு, 'ஜன்மன்' திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க ஊரக வளர்ச்சி துறை முன்வந்தது. அதன்படி, 1.46 லட்சம் ரூபாய் மத்திய அரசு நிதி மற்றும் 3.60 லட்சம் ரூபாய் மாநில நிதி என, இரு நிதிகளும் சேர்த்து, 5.06 லட்சம் ரூபாய் செலவில், 300 சதுர அடியில் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க ஆணை வழங்கப்பட்டு பணி துவங்கின. விறுவிறுப்பாக பணி நடந்த நிலையில், கூரை வரை அமைக்கப்பட்டது. ஜூன் மாத இறுதியில் பணி நிறுத்தப்பட்டது. இதனால் இருளர் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கான்கிரீட் வீட்டில் குடியேர உள்ளோம் என்ற ஆசை இருந்தது. திடீரென பணி நிறுத்தப்பட்டதால் செய்வதறியாது உள்ளோம். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், விரைந்து பணிகளை முடித்து, வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். வழக்கு தொடரப்பட்டதால் பணி நிறுத்தம் மருதவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், நிலம் தங்களுக்கு சொந்தமென, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து, வருவாய் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கு விசாரணை முடிந்ததும், வீடு கட்டும் பணி முடித்து, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். - ஊரக வளர்ச்சி துறை அதிகாரி, திருவள்ளூர் .