பவானியம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம்
ஊத்துக்கோட்டை:ஆடி மாத திருவிழாவையொட்டி, பவானியம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது.பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழா, வரும் 20ம் தேதி துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும். பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவர்.இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் யுவராஜ் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிசேகர், குணசேகரன் ஆகியோர் வரவேற்றனர்.பக்தர்களுக்கு தங்கும் வசதி, குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து, வாகன நிறுத்தம், வடமதுரை கூட்டுச்சாலை, ஆத்துப்பாக்கம், ராள்ளபாடி ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்தல், அங்கிருந்து கோவிலுக்கு இலவச மினி பேருந்துகள் இயக்குவது, 100 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.