ஆரணி ஆற்று மேம்பாலத்தில் இரும்பு சட்டங்களில் விரிசல்
ஊத்துக்கோட்டை:ஆரணி ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலத்தில், இரும்பு சட்டங்கள் உள்ள இடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், 2017ம் ஆண்டு 27.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாலம் கட்டும் பணி துவங்கி, 2021ம் ஆண்டு நிறைவடைந்தது. இந்த பாலம், 450 மீ., துாரம், 15 மீ., அகலத்தில் கட்டப்பட்டுள்ளது.இதன் வழியே ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு செல்கின்றனர். தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.அதேபோல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம் சத்தியவேடு, காளஹஸ்தி, தடா, வரதயபாளையம் ஆகிய இடங்களுக்கு செல்ல இப்பாலத்தை கடந்து, ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றனர்.இந்நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில் இரும்பு சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த பாலத்தில் இரும்பு சட்டம் உள்ள இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால், பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.