உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமான கரை சீரமைப்பு பணி துவக்கம்

பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமான கரை சீரமைப்பு பணி துவக்கம்

திருவள்ளூர்,பூண்டி நீர்த்தேக்க மதகு அருகே, சேதமடைந்த கரையை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, பூண்டி கொசஸ்தலை ஆற்றின் அருகே நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, 3.23 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். இங்கு, மழைக்காலத்தில் சேகரமாகும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர் ஆகியவை சேகரிக்கப்பட்டு, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் மூலம், சோழவரம் மற்றும் புழல் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, பூண்டி நீர்த்தேக்கத்தில், 2.18 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின்போது, நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. அப்போது, உபரி நீர், மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. அதிகளவு தண்ணீர் தேங்கியதால், நீர்த்தேக்கத்தின் உட்பகுதியில் மதகு அருகில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் சேதமடைந்தது. இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு, கரை சேதமடையும் அபாயம் ஏற்பட்டது. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பொதுப்பணி - நீர்வள ஆதார துறையினர், உபரி நீர் வெளியேறும் பகுதியில், சேதமடைந்த கரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ