அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் திருமழிசையில் தொடரும் அவலம்
திருவள்ளூர்:திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்கிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பகுதிவாசிகள் பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்னை, பூந்தமல்லி மற்றும் திருவள்ளூருக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில், குறைவான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், முதலில் வரும் பேருந்துகளில் பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் கூட்டம், கூட்டமாக ஏறி படியில் நின்ற படி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். மாணவர்களை பேருந்தின் நடத்துனர் படிக்கட்டை விட்டு பேருந்தின் உள்ள வருமாறு கூறினால், தகராறு ஏற்படுவதாக பேருந்தின் ஓட்டுநர்கள் கூறுகின்றனர். இவ்வாறு படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.எனவே, போக்குவரத்து துறையினர் காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேணடுமென பகுதிவாசிகள் மற்றும் மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.