உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி முருகன் கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். நேற்று கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது.தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு உற்சவர் முருக பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து அருள்பாலித்தார்.நேற்று வார விடுமுறை ஞாயிறு மற்றும் புரட்டாசி மாத கிருத்திகை விழா என்பதால், வழக்கமாக அதிகாலை, 5:30 மணி முதலே, மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொதுவழி தரிசனத்தில் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மலைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றதால், மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஒன்றரை கிலோ மீட்டர் துாரம் கடக்க, ஒன்றரை மணி நேரம் வாகன ஓட்டிகள் தவித்தனர். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை