உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் வீசப்பட்ட இறந்த பன்றிகள் நீர் பாய்ச்ச முடியாமல் கடும் அவதி

ஏரியில் வீசப்பட்ட இறந்த பன்றிகள் நீர் பாய்ச்ச முடியாமல் கடும் அவதி

திருவாலங்காடு ; திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கூடல்வாடி பட்டரை ஏரி, 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி நீர் வாயிலாக திருவாலங்காடு, கூடல்வாடி கிராமத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம் விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக, முதல் மதகு அருகே விவசாயிகள் சென்றபோது கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, ஏரியில் பார்த்தபோது, இறந்த நிலையில் மூன்று பன்றிகள் ஏரியில் வீசப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:இறந்த பன்றிகளை ஏரியில் மர்மநபர்கள் வீசியுள்ளனர். தற்போது, பன்றியை மீன் உண்ணுவதால், மீன் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும், அந்த மீனை சாப்பிடும் போது உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.தற்போது, மதகு அருகே இறந்த பன்றி உள்ளதால், விவசாய நிலத்திற்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல், இரண்டு நாட்களாக அவதிப்பட்டு வருகிறோம். இதே நிலை தொடர்ந்தால், பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் இறந்த பன்றிகளை அகற்றி, சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !