உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூடுதலாக 250 சிசிடிவி கேமரா திருத்தணியில் அமைக்க முடிவு

கூடுதலாக 250 சிசிடிவி கேமரா திருத்தணியில் அமைக்க முடிவு

திருத்தணி:“முருகன் கோவிலில் நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை விழாவில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் குற்றச்செயல்களை தடுக்க, கூடுதலாக 250 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்படும்,” என, டி.எஸ்.பி., கந்தன் தெரிவித்தார். திருத்தணி முருகன் கோவிலில், வரும் 14- 18ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை கலெக்டர் பிரதாப் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட எஸ்.பி., விவேகனாந்த சுக்லா தலைமையில், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நேற்று திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் மலைக்கோவில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறியதாவது: திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து தரிசிப்பர். திருத்தணி நகரத்தில், 74 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளன. மலைக்கோவிலில், 50க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளன. இருப்பினும், பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்கள் நடப்பதை தடுக்க, மலைக்கோவில் மற்றும் திருத்தணி நகரம் முழுதும், 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். கூடுதலாக 250 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை