உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொள்முதல் செய்வதில் கால தாமதம் மழையால் நனைந்த நெல் மணிகள்

கொள்முதல் செய்வதில் கால தாமதம் மழையால் நனைந்த நெல் மணிகள்

திருவள்ளூர்: அறுவடை செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, நெல் மணிகள் முளைத்ததால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம், சிறுவானுார் கண்டிகை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நடப்பு பருவத்தில் நெல் பயிரிட்டு, கடந்த மாதம் அறுவடை செய்துள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, அறுவடை செய்த நெல் மணிகளை, சிறுவானுார் கண்டிகை நெல் கொள்முதல் நிலையத்தில், விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் மணிகளை, கடந்த ஒரு மாதத்திற்கு முன் அறுவடை செய்தனர். அவற்றினை விற்பனை செய்வதற்காக, நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்தனர். ஆனால், பதிவு செய்து ஒரு மாதமாகியும், நெல் கொள்முதல் செய்யப்படாததால், அவற்றினை நெற் களத்தில் விவசாயிகள் உலர வைத்திருந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், உலர வைத்திருந்த நெல் மணிகள், நனைந்து விட்டன. தற்போது நெல் முளைத்து, நாற்றாக மாறிவிட்டது. இதனால், விவசாயிகள் கடும் விரக்தியடைந்துள்ளனர். இதற்கு, நெல் கொள்முதல் நிலையத்தில் உரிய காலத்தில் ஏற்றுக் கொள்ளாததே காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இனியாவது மீதம் உள்ள நெல் மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !