கும்மிடி - கிளாம்பாக்கம் இடையே நேரடி பஸ் சேவை
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு நேரடி பேருந்துகள் இயக்க வேண்டும் என, தென்மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, தேர்வாய்கண்டிகை சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வரை, கும்மிடிப்பூண்டியில் இருந்து நேரடியாக கோயம்பேடு சென்று, பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு சென்று வந்தனர். தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதவரம் சென்று, பின் மாதவரத்தில் இருந்து கிளாம்பாக்கம் சென்று, அங்கிருந்து சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். இதனால், தங்கள் உடைமைகள் மற்றும் குழந்தைகளுடன் மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்துகள் இயக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர் கோரிக்கை வி டுத்துள்ளனர்.