டாக்டர் - வக்கீல் இடையே தகராறு அரசு மருத்துவமனையில் பரபரப்பு
பொன்னேரி, :பணியில் இருந்த அரசு மருத்துவருக்கும், சிகிச்சை பெற வந்த வக்கீலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.பொன்னேரி ஆமிதாநெல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர், 44; வக்கீல். இவர், நேற்று மதியம் சிகிச்சைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவிற்கு சென்றார்.அங்கு, பணியில் இருந்த மருத்துவர் ராஜகணேஷ், 39, சுதாகரை பரிசோதித்துவிட்டு, மாத்திரைகளை பரிந்துரைத்தார். தனக்கு முதுகுவலி அதிகமாக இருப்பதால், ஊசி போடும்படி சுதாகர் கேட்டுள்ளார்.புறநோயாளிகள் சிகிச்சை பிரிவின் நேரம் முடிந்துவிட்டதால், அவசர சிகிச்சை பிரிவில் சென்று சிகிச்சை பெற்று கொள்ளும்படி டாக்டர் ராஜகணேஷ், சுதாகரிடம் தெரிவித்துள்ளார்.இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மருத்துவர், வக்கீலை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சக வக்கீல்கள், மருத்துவரை கைது செய்யக்கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி போலீசார் இருதரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர்.