ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் சமைக்க பயன்படுத்த கூடாது; உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அறிவுரை
திருவள்ளூர்:'ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி இனிப்பு, கார வகை உணவுகளை தயாரிக்க கூடாது' என, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அறிவுறுத்தினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருவள்ளூரில் நேற்று, இனிப்பு பலகாரம் மற்றும் கார வகை தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் கதிரவன் பேசியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விதவிதமான இனிப்பு பலகாரம், கார வகை, கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். தரமான மூலப்பொருட்களை கொண்டு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கலப்படமின்றி தயாரிக்க வேண்டும். கலப்பட பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்க கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் பயன்படுத்த கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டு காலம் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இருந்தால், உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் - 2006ன் படி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.