ஏகவள்ளி அம்மன் கோவில் குளம் ரூ.41 லட்சத்தில் புதுப்பித்தும் வீண்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஏகவள்ளி அம்மன் கோவில் குளம், 41 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரி புதுப்பித்தும் பயனில்லை என, பகுதிமக்களும், பக்தர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஏகவள்ளி அம்மன் கோவில் குளம், பல ஆண்டுகளாக துார்ந்து, செடி, கொடிகள் வளர்ந்து, படித்துறைகள் சேதமடைந்து இருந்தது. 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், கடந்தாண்டு 41 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. குளத்தை துார்வாரி, படித்துறை, நடைபாதை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதி ஏற்படுத்தப்பட்டது. ஓராண்டுக்கு முன் பணிகள் முடிவடைந்த நிலையில், முறையான பராமரிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப் படவில்லை என, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். தற்போது, இக்குளத்தை சுற்றி செடி, கொடிகள் படர்ந்து, ஆகாய தாமரை வளர்ந்துள்ளது. எனவே, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், இக்குளத்தில் துாய்மை பணிகளை மேற்கொண்டு, முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், குளத்தை சுற்றி மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதிமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.