கொசஸ்தலையாற்றை கடந்த முதியவர் சடலமாக மீட்பு
பாண்டூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், குப்பத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமைய்யா, 65; இவர், கனகம்மாசத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு கடந்த 1ம் தேதி மாலை பேருந்து வாயிலாக ராமஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினார்.அங்கிருந்து நடந்து ஈன்றம்பாளையம் கொசஸ்தலையாற்றை கடந்து தன் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையால் கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஆற்றை கடந்த முதியவர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.சம்பவம் குறித்து அப்பகுதிவாசிகள் அளித்த தகவலின்படி கனகம்மாசத்திரம் போலீசார், திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் உதவியுடன் இரண்டு நாட்களாக தேடிய நிலையில், நேற்று காலை, குப்பத்துப்பாளையம் அருகே முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.இதையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு, லட்சுமைய்யா உடலை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.