அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கீச்சலம் கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தின் நடுவே உள்ள அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில், பொதுமக்கள் தங்களுடைய சுப நிகழ்ச்சிகள், விநாயகர் வழிபாடு நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர், புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளிப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த கீச்சலம் கிராம மக்கள், 50க்கும் மேற்பட்டோர், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதன்பின், கோட்டாட்சியர் தீபாவை சந்தித்து, அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதை தடுத்து நிறுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, மனு அளித்தனர். மனுவை பெற்ற கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.