ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் திருவள்ளூரில் மீண்டும் துவக்கம்
திருவள்ளூர்:திருவள்ளூர் ஜே.என்.சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள கடைகளையும் நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து, திருத்தணி, திருப்பதி செல்லும் அனைத்து வாகனங்களும், திருவள்ளூர் ஜே.என்.சாலையை கடந்து சென்று வருகின்றன. இச்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன.வீரராகவர் கோவிலுக்கு விசேஷ நாட்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இதனால், திருவள்ளூர் தலைநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் பல்வேறு தரப்பினரும் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, திருவள்ளூர் ஜே.என்.சாலை - ஆவடி பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்த, 17 கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர், கடந்த பிப்., மாதம்அகற்றினர். முழுதும் அகற்றப்படாத நிலையில், மீண்டும் அங்கு ஆக்கிரமிப்பு ஏற்படும் நிலை இருந்து வந்தது.நேற்று நெடுஞ்சாலைத் துறையினர், பொக்லைன் இயந்திரம் வாயிலாக மீதமுள்ள ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றினர்.