காலை உணவு திட்டம் விரிவாக்கம் 61,155 மாணவ - மாணவியர் பயன்
திருவள்ளூர்:முதல்வர் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் வாயிலாக, மாவட்டத்தில் 1,240 பள்ளிகளைச் சேர்ந்த 61,155 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், முதல் வரின் காலை உணவு திட்டம், 2022 முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 2023ல் எடுத்த கணக்குப்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 1,095 பள்ளிகளில், 51,215 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், உள்ளாட்சி அமைப்பு களின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம், 2024 முதல், 99 பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு, 4,112 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது, நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் 30 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக, கூடுதலாக 3,675 மாணவ - மாணவியர் பயன் பெறுவர். தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில், 1,240 பள்ளிகளைச் சேர்ந்த 61,155 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.