உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் பேருந்து வசதி அதிகரிக்க எதிர்பார்ப்பு

பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் பேருந்து வசதி அதிகரிக்க எதிர்பார்ப்பு

பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, எலவம்பேடு, மேட்டுப்பாளையம், நாலுார் கம்மார்பாளையம், வன்னிப்பாக்கம் என, 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் வழியாக காட்டூர், தத்தமஞ்சி, ஊரணம்பேடு கிராமங்களுக்கு மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.இந்த வழித்தடத்தில் குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால், ஷேர் ஆட்டோக்களை நம்பியே பயணியர் உள்ளனர். பொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவியர் வந்து செல்கின்றனர்.பேருந்து சேவை குறைவாக இருப்பதாலும், பள்ளி நேரத்தில் வந்து செல்லாததாலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வேறு வழியின்றி ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். இதற்காக மாணவியர் தினமும், 40 - 60 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இது, பெற்றோருக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது.ஷேர் ஆட்டோக்களில் மாணவியரை கூட்டமாக ஏற்றிச் செல்வதால், அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில், நேரடி நகரப் பேருந்துகளை அதிகளவில் இயக்க வேண்டும்.குறைந்தபட்சம் பள்ளி மாணவியர் பயன்பெறும் வகையில், காலை - மாலை நேரங்களில் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !