மேலும் செய்திகள்
அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
4 minutes ago
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்தும், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 574 ஏரிகளில், 182 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஆக்கிரமிப்பு, வரத்து கால்வாய் சீரமைக்காதது போன்ற காரணங்களால், மீதம் உள்ள ஏரிகள் நிரம்பாதது, விவசாயிகளுக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், ஆண்டு தோறும் 1.30 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. நெல், கரும்பு, மா, வாழை, வேர்க்கடலை, காய்கறி, கீரை வகைகள் மற்றும் பூ உற்பத்தி என, பலவகையான விவசாய பணிகளில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாய நிலங்களுக்கு, ஏரி மற்றும் கிணற்று நீர் பாசனமே பிரதானமாக உள்ளது. விவசாய பணி ஆரணி, கூவம் மற்றும் கொசஸ்தலை ஆறுகளில், வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைநீரால், நிலத்தடி நீர் அதிகரித்து, விவசாய பணிகளுக்கு உதவியாக உள்ளது. கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்தில், 324 ஆரணி வடிநில கோட்டத்தில், 250 என மொத்தம், 574 ஏரிகள் உள்ளன. அவை அனைத்தும், 100 ஏக்கர் பரப்பளவிற்கு மேற்பட்ட ஏரிகள் ஆகும். அந்த ஏரிகள் நிரம்பி, அவற்றின் நீரை வைத்து, அருகில் உள்ள விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த, அக்.16ம் தேதி துவங்கியது. அவ்வப்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில், கடந்த நான்கு நாட்களாக 'டிட்வா' புயல் காரணமாகவும், கன மழை பெய்து வருகிறது. சராசரியை விட அதிக மழை நீர் கிடைத்தும், ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாமல், வறண்டு காணப்படுகிறது. இவ்விரண்டு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, 574 ஏரிகளில், தற்போது 182 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளன. குறைவான பரப்பளவு மீதம் உள்ள ஏரிகள், அதற்கு குறைவாகவே உள்ளது. குறிப்பாக, 231 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே நிரம்பி உள்ளது. மீதம் உள்ள ஏரிகளிலும், 75-50 சதவீதத்திற்குள் தான் நிரம்பி உள்ளது. ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 14 ஒன்றியங்களிலும், நுாறு ஏக்கருக்கும் குறைவான பரப்பளவு உள்ள, 528 ஏரிகள் உள்ளன. அவற்றில், 37 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மீதம் உள்ள, 491 ஏரிகளும், 75-25 சதவீதத்திற்குள் தான் நிரம்பி உள்ளன. மேலும், குளம், குட்டை போன்ற இதர நீர்நிலைகளான, 3,302ல், 150 மட்டுமே முழுதுமாக நிரம்பி உள்ளன. 1,293 நீர்நிலைகள் 75 சதவீதத்திற்குள்ளும், 1,307 நீர்நிலைகள் 50 சதவீதமும், 553 நீர்நிலைகள் 50-25 சதவீதமும் நிரம்பி உள்ளன. இதற்கு காரணம், பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாயம் செய்து வருவது தான். ஆக்கிரமிப்பாளர்கள், ஏரிக்கு வரும் தண்ணீரை கரையை உடைத்தும், கால்வாய் வழியாகவும் வெளியேற்றி வருவதாக, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
4 minutes ago