சாக்கு மூட்டை கிடங்கில் தீ விபத்து
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த சானுார் மல்லாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான இடத்தில், வெங்காய மூட்டைக்கான சாக்கு தைக்கும் கிடங்கு வைத்துள்ளார். இதில், இவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் வேலை பார்த்து வருகின்றனர்.நேற்று மாலை இவரது கிடங்கில், திடீரென தீப்பற்றி சாக்கு மூட்டைகள் எரிந்தன. தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ராஜேந்திரனும், தொழிலாளர்களும் ஈடுபட்டனர். தீ மளமளவென பரவிய நிலையில், சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும், சாக்கு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமாகின. ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.