ஒரே பைக்கில் நான்கு பேர் பயணம் கண்டுகொள்ளாத போலீசாரால் அபாயம்
திருவள்ளூர்:இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற போக்குவரத்து விதியை மீறி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் மூவர், நால்வர், ஐவர் என, இஷ்டம் போல் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இவ்வாறு போக்குவரத்து விதிமீறி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோரை, காவல் துறையினர் கண்டுகொள்ளாததே காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இவர்கள் தலைக்கவசமும் அணிவதில்லை.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'விதிமீறும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து வழக்கு பதிவு செய்யும் போது அரசியல் கட்சி, அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தலையீட்டால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளித்தால், தான் இருசக்கர வாகன விபத்துகளை கட்டுப்படுத்த முடியும்' என்றனர்.எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.