| ADDED : நவ 28, 2025 03:43 AM
திருத்தணி: திருத்தணி ரயில் நிலைய வளர்ச்சி பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, தென்னக ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் சைலேந்திர சிங் அறிவுறுத்தினார். திருத்தணி ரயில் நிலையம் தரம் உயர்த்த கடந்த 2023ம் ஆண்டு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திருத்தணி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று திருத்தணி ரயில் நிலையத்திற்கு தென்னக ரெயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் சைலேந்திர சிங் மற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் என, பத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். 'அம்ரித் பாரத்' திட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். பொது மேலாளர், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகளிடம் பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, அறிவுறுத்தினார்.