வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்தவர் கைது
திருவள்ளூர் தபால் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். அரக்கோணம் மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், விஜி, 40. இவருக்கு, திருவள்ளூர் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜீவானந்தன், 49 என்பவர் அறிமுகமானார். தபால் நிலைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, விஜியிடம் இருந்து 2022 ஜனவரி 1ம் தேதி ஜீவானந்தம் ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். தொடர்ந்து பல தவணைகளாக 13 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இந்நிலையில் வேலை வாங்கி தருவதில் தாமதம் ஏற்பட்டதால், விஜி பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதையடுத்து ஜீவானந்தம், 13 லட்சத்திற்கான வங்கி காசோலையை விஜியிடம் வழங்கியுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் விஜி புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் ஜீவானந்தனை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். -