சென்னை: சென்னை பெருநகரில், மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்து சேவையை பயன்படுத்துவோர், ஒரே டிக்கெட்டில் பயணிக்க வசதியாக, 'சென்னை ஒன்' என்ற செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியை, போக்குவரத்து குழுமமான 'கும்டா' உருவாக்கியது. செப்., 22ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியை, 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநகர போக்குவரத்து கழகம், 1,000, 2,000 ரூபாய் பாஸ்கள், மின்னணு அட்டை வடிவில் பெறும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று துவக்கிவைத்தார். 'நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்' என்ற தேசிய விருது பெற்றமைக்கு, மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கினார். அவர் பேசியதாவது: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெரு நகரங்கள் இருக்கின்றன. ஆனால், சென்னையில் இருப்பது போல், அனைத்து பகுதிகளை இணைக்கும் வகையில், பொது போக்குவரத்து வசதி இல்லை. அதிக பேருந்துகளை உடையது தமிழகம் தான். இலவச பயண திட்டத்தின் கீழ், தினமும் 12.5 லட்சம் பெண்கள் பயணித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு, மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. டிக்கெட் இயந்திரம் வாயிலாக டிக்கெட் வழங்கப்படுகிறது. சென்னை ஒன் செயலி வாயிலாக மாதந்திர பாஸ் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் சிற்றுந்துகளை கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.