உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மந்தமாக நடைபெறும் மேம்பால பணி நடப்பாண்டும் ஆற்றை கடப்பதில் சிக்கல் வாகன ஓட்டிகள் திக்... திக்

மந்தமாக நடைபெறும் மேம்பால பணி நடப்பாண்டும் ஆற்றை கடப்பதில் சிக்கல் வாகன ஓட்டிகள் திக்... திக்

திருவாலங்காடு:கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 19.50 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால், வரும் மழைக்காலத்திலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும் என, வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவாலங்காடு -- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், ஓரத்துார் -- பாகசாலை இடையே கொசஸ்தலையாறு செல்கிறது.

தரைப்பாலம்

இங்கு, ஆற்றின் குறுக்கே, 100 மீட்டர் நீளம், 5 அடி உயரத்தில், 1998ம் ஆண்டு, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினரால் தரைப் பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலம் வழியாக சின்னம்மாபேட்டை, ஓரத்துார், பொன்னாங்குளம், மணவூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். கடந்த 2019, 2021, 2022ம் ஆண்டுகளில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதமடைந்தது. தொடர்ந்து, 20 நாட்கள் வரை தரைப்பாலத்தின் மேல் வெள்ளநீர் சென்றதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும், தரைப்பாலத்தை பலப்படுத்த அமைக்கப்பட்ட கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால், தரைப்பாலம் பலமிழந்து, உடையும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிமக்கள் அச்சமடைந்தனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், பலமிழந்துள்ள தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, மேம்பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வெள்ள பெருக்கு

இதையடுத்து, பாகசாலை கொசஸ்தலையாற்றில் மேம்பாலம் அமைக்க, நபார்டு மற்றும் கிராம சாலை திட்டம் மூலம், 19.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டது. தற்போது, பணி மந்தகதியில் நடப்பதாக, வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். இதுகுறித்து, ஓரத்துாரைச் சேர்ந்த ஆர்.பிரசாத் கூறியதாவது: பாகசாலை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தரைப்பாலத்தை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வேலை, கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு, 12 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக மேம்பால பணி நடந்து வருகிறது. இந்தாண்டு பருவமழையின் போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பணி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், தரைப்பாலம் வழியாக வாகன ஓட்டிகள் சென்றுவர முடியாத நிலை ஏற்படும். எனவே, பாலப் பணியை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ