உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வர்ணம் பூசாத வேகத்தடைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

வர்ணம் பூசாத வேகத்தடைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம் - கண்ணம்பாக்கம் சாலையில், கண்ணுக்கு புலப்படாத வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் கிராமத்தில் இருந்து மாநெல்லுார், பல்லவாடா வழியாக கண்ணம்பாக்கம் வரை செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ளது. இச்சாலையில் உள்ள பள்ளி, முக்கிய சந்திப்புகள், திருப்பங்கள், நெருக்கமான குடியிருப்பு பகுதிகள் என, 20க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த வேகத்தடைகளில் பூசப்பட்ட வர்ணம் மறைந்து, ஒன்றரை ஆண்டுகளாக கண்களுக்கு புலப்படாத வகையில் மிகவும் ஆபத்தாக உள்ளது. வேகத்தடை இருப்பது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இச்சாலையில், மாதர்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் வேகத்தடை இருப்பது தெரியாமல், அதிவேகமாக வரும் வாகனங்களால், பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், இச்சாலையில் உள்ள அனைத்து வேகத்தடைகளுக்கும் வர்ணம் பூச வேண்டும். இதற்கு, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ