சத்துணவு, அங்கன்வாடி காலி பணியிடம் நியமனம்... எப்போது?: 2,461 இடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் காத்திருப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் 1,707 மற்றும் அங்கன்வாடி மையங்களில் 754 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், முதல் கட்டமாக சத்துணவு மையங்களில் 236 மற்றும் அங்கன்வாடி மையங்களில் 369 பணியிடங்களை நிரப்ப, நேர்முகத் தேர்வு முடிந்தும், இதுவரை பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், தேர்வில் பங்கேற்றவர்கள் இரண்டு மாதத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் வாயிலாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டம் முழுதும் 1,535 பள்ளிகளில் சத்துணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி மாணவர்களுக்கு சத்துணவு தயாரிக்க, 1,477 அமைப்பாளர்கள், 1,500 சமையலர்கள், 1,505 உதவியாளர்கள் என, 4,482 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், தற்போது 758 சத்துணவு அமைப்பாளர்கள், 1,173 சமையலர்கள் மற்றும் 844 உதவியாளர்கள் என, 2,775 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். சத்துணவு அமைப்பாளர்கள் 719, சமையலர்கள் 327 மற்றும் உதவியாளர்கள் 661 என, 1,707 பணியிடங்கள் காலியாக உள்ளன. கர்ப்பிணியர் முதல், பிறந்த 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி அமைக்க, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையங்களில், 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்த்தல், முன்பருவ கல்வி, இணை உணவு, சத்துணவு மற்றும் தடுப்பூசி போன்ற திட்டப் பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் புழல் தவிர்த்து, மீதம் உள்ள 13 ஒன்றியங்களில், 1,757 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், 1,718 அங்கன்வாடி பணியாளர்களில் 1,303 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதில், 415 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், அங்கன்வாடி உதவியாளராக 1,718 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில், 1,379 பேர் மட்டுமே பணிபுரிவதால், 339 இடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, குறைந்த எண்ணிக்கையில் பணிபுரிவோர், காலி பணியிட எண்ணிக்கையில் உள்ளோரின் பணியையும் கூடுதலாக கவனிக்கும் அவலம் நிலவுகிறது. இதனால், கூடுதல் பணிச்சுமை, மன உளைச்சல், மாணவ - மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு தரமான உணவு தயாரிப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முதல் கட்டமாக 236 சத்துணவு மைய உதவியாளர்கள் பணியிடங்கள், நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப முடிவு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக, 3,669 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு, கடந்த மே மாதம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. நேரடி நியமனம் அதே போல், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில், 301 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 68 உதவியாளர்கள் பணியிடத்திற்கும் நேரடி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்பணியிடங்களுக்கு, மாவட்டம் முழுதும் 8,048 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதற்கான நேர்முகத் தேர்வும் மே 26ல் துவங்கி, ஜூன் 9ம் தேதி வரை நடந்தது. நேர்முகத் தேர்வு முடிந்து இரண்டு மாதங்களாகியும், இதுவரை காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள், தங்களுக்கு எப்போது பணி வழங்கப்படும் என தெரியாமல் காத்திருக்கின்றனர். மேலும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இன்றி, கூடுதல் பணிச்சுமையால் சக ஊழியர்கள் பரிதவித்து வருகின்றனர். இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களிடம் கேட்டபோது, 'காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 'அவற்றில் தகுதியான வர்களின் பட்டியல், மாவட்ட நிர்வாகம் வாயிலாக தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அரசு அனுமதி அளித்ததும், தகுதியானவர்கள் உரிய பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவர்' என்றனர்.