இடிந்து விழும் நிலையில் ஊராட்சி அலுவலக கட்டடம்
திருத்தணி:கோரமங்கலம் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், உடனடியாக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி ஒன்றியம் கோரமங்கலம் - மாம்பாக்கசத்திரம் சாலையில், கோரமங்கலம் ஊராட்சி அலுவலகம் கட்டடம், 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இக்கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், கூரை மற்றும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அலுவலக கட்டடம் பூட்டப்பட்டது. இங்கிருந்த ஊராட்சி கோப்புகள் மற்றும் கணினி போன்ற முக்கிய ஆவணங்கள், ஊராட்சி சேவை கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது, சேவை மைய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கேயே புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.