கட்சி கொடி கம்பங்கள் திருவள்ளூரில் அகற்றம்
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை, நகராட்சி நிர்வாகம் அகற்றியது.மாநில, மாவட்ட மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சியினர் அமைத்திருந்த கொடி கம்பங்களை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் டோல்கேட், எம்.ஜி.ஆர்., சிலை அமைந்துள்ள பகுதி முதல் ஜே.என்.சாலை வரை மற்றும் நகராட்சி சாலைகளில் ஏராளமான கட்சி கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன.உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நேற்று நகராட்சி அலுவலர்கள், பொக்லைன் இயந்திரம் வாயிலாக அரசியல் கட்சியினர் அமைத்திருந்த கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியை துவக்கினர். சில இடங்களில் சிமென்ட் பீடம் அமைக்கப்பட்டிருந்தது. அதையும் பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து, கொடி கம்பங்களை அகற்றினர்.