அரசு பேருந்து - லாரி மோதல் சிறுகாயத்துடன் தப்பிய பயணியர்
திருவள்ளூர் : திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து, நேற்று மதியம் பயணியரை ஏற்றி கொண்டு, தடம் எண்: '82சி' என்ற அரசு பேருந்து, செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஓட்டுநராக ரமேஷ், 35 மற்றும் நடத்துனராக சுரேஷ், 26, என்பவரும் பணிபுரிந்து வந்தனர். திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே, நேற்று மதியம் 2:30 மணியளவில் பேருந்து சென்ற போது, அதே திசையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதிக இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி, அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியது.பயணியர் அலறல் சத்தத்தைக் கேட்டதும், இரு வாகனங்களும்நிறுத்தப்பட்டன. பேருந்தின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த இரு பயணியர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனால், சென்னை செல்லும் நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருவள்ளூர் நகர போலீசார், வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.