கும்மிடியில் ரயில்வே போலீஸ் நிலையம் ஏற்படுத்த பயணியர் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாகும். கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் இடையே தினசரி, 40க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.அவற்றில் தினசரி பல்லாயிரக்கணக்கான பயணியர் பயணித்து வருகின்றனர்.மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் மதிப்பில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் நவீன மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், ரயில் பயணியரை அச்சமடைய செய்துள்ளது.கல்லுாரி மாணவர்கள் அடிதடி, ரகளை, கோஷ்டி மோதல், இரவில் ரயில் பயணியரிடம் நடக்கும் வழிப்பறி உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.அவற்றில் பல சம்பவங்கள் வெளியே தெரிய வராமல் இருப்பதாக ரயில் பயணியர் தெரிவிக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம், வெகு தொலைவில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையம் இருப்பதே என, கூறுகின்றனர்.உதாரணத்திற்கு ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் விபத்து அல்லது வழிபறி சம்பவம் நடந்தால், அங்கிருந்து, 58 கி.மீ., தொலைவில் உள்ள கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு புகார்தாரர் செல்ல வேண்டும்.மேலும், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், நீண்ட துார ரயில் பாதையில் கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.அனைத்து வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டு வரும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். அப்படி அமைந்தால், மீஞ்சூரில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி முதல் ஆரம்பாக்கம் வரை உள்ள, 36 கி.மீ., தொலைவை எளிதாக கண்காணித்து ரயில் பயணியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஏதுவாக இருக்கும் என, ரயில் பயணியர் எதிர்ப்பார்க்கின்றனர்.