உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  குடிநீர் பிரச்னைக்கு 9 ஊராட்சிகளில் நிரந்தர தீர்வு :ரூ.45 கோடியில் திட்டப்பணிகள் நிறைவு

 குடிநீர் பிரச்னைக்கு 9 ஊராட்சிகளில் நிரந்தர தீர்வு :ரூ.45 கோடியில் திட்டப்பணிகள் நிறைவு

திருத்தணி: திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், 9 ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு, ஜல் - ஜீவன் திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாயில் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதால் நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், ஜல் - ஜீவன் திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், கடந்த, 2023ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் துவங்கியது. கொசஸ்தலை ஆற்றில், 6 உறிஞ்சு கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு, 2.76 மில்லியன் லிட்டர் குடிநீர் மின்மோட்டார் மூலம் திருத்தணி ஒன்றியம் செருக்கனுார், தாடூர், எஸ்.அக்ரஹாரம், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனுார், ஆர்.கே.பேட்டை, ஜி.சி.எஸ்., கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம் ஆகிய 9 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறிய தாவது: திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய இரு ஒன்றியங்களில், 9 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை நிரந்தரமாக தீர்க்கவும், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கவும் மூன்று இடங்களில் தரைமட்ட நீர்உந்து கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிணறுகளில் இருந்து மின்மோட்டார்கள் மூலம், ஊராட்சிகளின் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படும். அங்கிருந்து தெரு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஜன., 1 புத்தாண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஊராட்சிகளுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன் பின் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கி, மாதம், 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர், திருத்தணி ஒன்றியத்தில், 23 குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், 12 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் என மொத்தம், 35 குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படும். அங்கிருந்து கிராமங்களுக்கு வழக்கமான குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும். -வை.ஜெயக்குமார், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி, திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்