காவல் நிலையமா... காயலான் கடையா? பாழாகும் பறிமுதல் வாகனங்களால் அதிருப்தி
திருவாலங்காடு, திருவாலங்காடு காவல் நிலையத்தில், பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது, குற்றத்துக்கு அவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.விபத்து மற்றும் சட்ட விரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் போன்றவையும் கைப்பற்றப்படுகின்றன.இவ்வாறு பிடிபடும் வாகனங்கள், திருவாலங்காடு காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள காவலர் குடியிருப்பு மற்றும் அதன் வளாகத்தின் வெளியே, பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. அவை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மட்கி வீணாகின்றன.பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடாமல், காயலான் கடையில் பழைய பொருட்களை சேகரித்து வைத்திருப்பதை போல வைத்திருப்பதால், வாகனங்கள் வீணாவதுடன், ஏலம் விடுவதன் வாயிலாக அரசுக்கு கிடைக்கும் வருவாயும் வீணாகிறது.துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை ஏலம் விடாமல், அலட்சியம் காண்பிப்பதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.