சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி தொழிற்சாலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தரமற்ற நிலக்கரியை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டை கிராமத்தில், இரு தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த தொழிற்சாலைகளில் தடைசெய்யப்பட்ட தரமற்ற நிலக்கரிகளை மூலப்பொருளாக பயன்படுத்தி வருவதாக கூறப் படுகிறது. அந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கரும்புகையானது, சிறுபுழல்பேட்டை, புதுகும்மிடிப்பூண்டி, முத்துரெட்டிகண்டிகை, ரெட்டிபாளையம் ஆகிய கிராம பகுதிகளின் சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பல முறை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நேற்று மார்க்சிஸ்ட் கட்சியுடன் கிராம மக்கள் இணைந்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட செயலர் கோபால் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரைசுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.