குப்பை மலையில் தினமும் புகைவதால் சுற்றுச்சூழல் மாசு தலக்காஞ்சேரியில் பொதுமக்கள், மாணவர்கள் அவதி
திருவள்ளூர்:திருவள்ளூர் தலக்காஞ்சேரியில் குப்பை மலையில் தினமும் தீப்பற்றி எரிந்து, புகை மண்டலம் உருவாகி, குடியிருப்புவாசிகள் மற்றும் மாணவ, மாணவியருக்கு மூச்சுத்திணறால் ஏற்பட்டு வருகிறது.திருவள்ளூர் நகராட்சியில், தினமும், மக்கும், மக்காத குப்பை என, 35 டன் குப்பை சேருகிறது. துப்புரவு ஊழியர்கள் வீடுதோறும் சென்று பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, நகராட்சியில் சேகரமாகி வந்த குப்பை, ஈக்காடு அருகே உள்ள தலக்காஞ்சேரியில் சேகரிக்கப்பட்டு வந்தது.இடப்பற்றாக்குறை மற்றும் பகுதிவாசிகளின் எதிர்ப்பால், கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில், குப்பையை உரமாக மாற்றும் திட்டம் துவங்கப்பட்டது.இந்நிலையில், தலக்காஞ்சேரியில், பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு மலை போல் குவிந்திருந்த குப்பையை கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன், 3 கோடி ரூபாய் மதிப்பில் 'பயோமைனிங் முறையில் அழிக்கப்பட்டது. கொரோனா காலத்திற்கு பின், அத்திட்டம் நிறுத்தப்பட்டது. அவ்வப்போது இந்த குப்பையை தீ வைத்து எரித்து வருகின்றனர். இதன் காரணமாக, அப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு, குடியிருப்பு வாசிகளையும், அங்குள்ள நகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், கடுமையாக பாதிப்படைத்து வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தலக்காஞ்சேரி வழியாக கிராமவாசிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் இவ்வழியாக சென்று வருகின்றனர். அருகிலேயே தனியார் மற்றும் நகராட்சி பள்ளிகளும், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இங்கிருந்து எழும் துர்நாற்றத்தால், காற்று மாசடைந்து வருகிறது.அவ்வப்போது இங்குள்ள குப்பையை சிலர் தீ வைத்து கொளுத்துவதால், சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. குப்பை மேட்டில் உருவாகும் புகையால், மாணவ, மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பு
கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சியில், பாக்குபேட்டை, இலுப்பூர் வழியாக பாப்பரம்பாக்கம், மண்ணுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இப்பகுதியில் துாய்மை பணியாளர் குப்பையை முறையாக அகற்றாமல் தீயிட்டு கொளுத்து வருகின்றனர். இதனால் ஏற்படும் புகையால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட வளர்புரம் பகுதியிலும் நெடுஞ்சாலையோரம் குப்பையை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.