அரசு விருந்தினர் மாளிகையை சீரமைக்க ரூ.1 கோடி கேட்கும் பொதுப்பணித்துறை
திருத்தணி:திருத்தணியில் சேதமடைந்துள்ள அரசினர் விருந்தினர் மாளிகை சீரமைக்க, ஒரு கோடி ரூபாய் தேவை என, பொதுப்பணித்துறையினர் வலியுறுத்தி உள்ளனர். திருத்தணி தாலுகா அலுவலகம் அருகே, அரசு விருந்தினர் மாளிகை கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இதில் அரசு துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய வி.ஐ.பி.,க்கள் வந்து தங்கிச் செல்வர். மேலும், அதிகாரிகள் ஆய்வு கூட்டமும் நடைபெறும். இந்த கட்டடத்தை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், விருந்தினர் மாளிகை சேத மடைந்தது. கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது. இது குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இதைடுத்து, பொதுப்பணித்துறையினர் அரசு விருந்தினர் மாளிகை சீரமைக்க, திட்ட மதிப்பீடு தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு விருந்தினர் மாளிகை மிகவும் பழுதடைந்து உள்ளதால், பயன்பாட்டில் இல்லை. விருந்தினர் மாளிகை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர, ஒரு கோடி ரூபாய் தேவை. இதற்கான திட்டமதிப்பீடு தயாரித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளோம். பல மாதங்கள் ஆகியும் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்காததால், விருந்தினர் மாளிகை சீரமைப்பதில் காலதாமதம் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.