கொங்கியம்மன் நகரில் சாலை சீரமைக்க கோரிக்கை
மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கியம்மன் நகரில், 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.இங்கு உள்ள தெருச்சாலைகள் சேதம் அடைந்து உள்ளன. சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இரவு நேரங்களில் சாலைப்பள்ளங்களில் சிக்கி தவிப்பதுடன், சிறு சிறு விபத்துகளுக்கும் உள்ளாகின்றனர்.மழைக்காலங்களில் தெருச்சாலைகளில் மழைநீர் தேங்கி, பள்ளங்கள் இருப்பது தெரியாமல் தடுமாற்றத்துடன் பயணிக்கும் நிலைக்கும் ஆளாகின்றனர்.தெருச்சாலைகளை சீரமைத்து தரும்படி குடியிருப்புவாசிகள் ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து எந்த நடவடிக்கை இல்லாததால் அவர்கள் விரக்தி அடைந்து உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு கொங்கியம்மன் நகரில் உள்ள தெருச்சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.