திருத்தணி அரசு மருத்துவமனையில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை
திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனைக்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும், 120க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர, திருத்தணி வருவாய் கோட்டத்தில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.மேலும், விபத்துகளில் உயிரிழந்தவர்களை, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பிரச்னை மற்றும் விபத்துகள் நடந்தால், சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.ஆனால், திருத்தணி அரசு மருத்துவமனையில் ஒரேயொரு போலீசார் மட்டுமே பணிபுரிந்து வருவதால், இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்க முடியாததால் நகை, பணம் உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.எனவே, மாவட்ட எஸ்.பி., நோயாளிகளின் பாதுகாப்பு நலன் கருதி, அரசு மருத்துவமனையில் கூடுதல் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.