சாம்ராஜ்கண்டிகையில் பாயும் ஓடை சிறுபாலம் அமைக்க கோரிக்கை
ஆர்.கே.பேட்டை: தெருவின் குறுக்கே பாயும் ஓடையால், சாம்ராஜ்கண்டிகை கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரி ஊராட்சிக்கு உட்பட்டது சாம்ராஜ்கண்டிகை. இந்த கிராமத்தின் நடுவே ஓடை பாய்கிறது. இந்த ஓடையின் வடகரையில், திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ருக்மணி புரம் அமைந்துள்ளது. இரண்டு தாலுகாவை இணைக்கும் இந்த ஓடைக்கு பாலம் இல்லாததால், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஓடையை தாண்டி தெருவில் நடந்து செல்ல வழியின்றி தவிக்கின்றனர். கிராமத்தின் மேற்கில் உள்ள பாலத்தின் வழியாக சுற்றிக்கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. தெருவில் விளையாடும் சிறுவர்கள், விளையாட்டாக ஓடையில் மீன் பிடிக்கவும் முயற்சிக்கின்றனர். மூன்று மாதங்களாக இந்த ஓடையில் தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. எனவே, கிராம மக்களின் நலன் கருதி, ஓடையின் குறுக்கே சிறுபாலம் கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.