பள்ளத்தில் பஸ் நிலையம் சமன்செய்ய கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பஜார் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. அதன் முகப்பு சாலை உயரமாக அமைக்கப்பட்டதால், பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி தாழ்வாக உள்ளது.இதனால், மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தில் குளம்போல் மழைநீர் தேங்கி, பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நாள் கணக்கில் மழைநீர் தேங்கும் போது, அப்பகுதியின் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.மேலும், பேருந்துகள் அனைத்தும் சாலையில் இருந்து நிலையத்திற்குள் இறங்கும் போதும், ஏறும் போதும், தரையை உரசியபடி செல்ல வேண்டியுள்ளது. தாழ்வாக உள்ள மாநகர் பேருந்துகளின் அடிப்பகுதி தேய்வதால், உள்ளே அமர்ந்திருக்கும் பயணியர் அச்சம் அடைகின்றனர்.எனவே, மாதர்பாக்கம் பேருந்து நிலையத்தை, சாலைக்கு இணையாக சமன்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.