| ADDED : பிப் 15, 2024 08:22 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் பூஞ்சோலை நகர், அரிச்சந்திராபுரம் சாலை, காலனி, தொழுதாவூர் சாலை மற்றும் தக்கோலம் சாலை, இஸ்ரேல் நகர், பூமாலை நகரில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 1,100 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர்.இஸ்ரேல் நகர், தக்கோலம் சாலை, பூமாலை நகரில் 200 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் ரேஷன்கடைக்கு செல்ல திருவாலங்காடு ரயில் நிலைய தண்டவாளத்தைக் கடந்து அரசு பள்ளி அருகே உள்ள ரேஷன்கடையில் பொருட்களை வாங்கி வரும் நிலை உள்ளதால், முதியவர்கள், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.எனவே தங்கள் பகுதியில் பகுதிநேர ரேஷன்கடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்தாண்டு திருவள்ளூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், 6 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டு ஆகும் நிலையில் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. புதிதாக கட்டப்பட்ட ரேஷன்கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.