பொன்னேரி - திருவள்ளூர் தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
பொன்னேரி:பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள திருவள்ளூருக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். பொன்னேரியில் இருந்து திருவள்ளூருக்கு, தடம் எண் - 171, 160சி அரசு ஆகிய பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இவை, ஓராண்டாக சரிவர இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.நேரடி பேருந்து வசதி கிடைக்காமல், பொன்னேரியில் இருந்து செங்குன்றம் சென்று, அங்கிருந்து மாற்று பேருந்தில் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் காலவிரயம், கூடுதல் பயண செலவு ஏற்படுகிறது. கலெக்டர் அலுவலத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், மக்கள் குறைகேட்பு கூட்டம் உள்ளிட்டவைகளில் பங்கேற்க செல்லும் விவசாயிகள் மற்றும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே, பொன்னேரி - திருவள்ளூர் வழித்தடத்தில், கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.