சிப்காட் - மாதர்பாக்கம் இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகம் - மாதர்பாக்கம் இடையே அரசு பேருந்து இயக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு, போதிய பேருந்து வசதியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் தினமும் பல இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து, பாத்தப்பாளையம், ஈகுவார்பாளையம் வழியாக மாதர்பாக்கம் வரை காலை - மாலை நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.