காஞ்சிபுரம் அரசு பேருந்து நிறுத்தம் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி
கடம்பத்துார், திருவள்ளூரில் இருந்து கடம்பத்துார், பேரம்பாக்கம், மப்பேடு, சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் வழியாக, தடம் எண்: 160 ஏ, 160 பி என்ற விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்துகளை கடம்பத்துார், பேரம்பாக்கம் உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக, தடம் எண்: 160 ஏ என்ற பேருந்து, கடம்பத்துார் ஒன்றியம் தண்டலம் பகுதியிலிருந்து, திருவள்ளூருக்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.மற்றொரு பேருந்து, பூந்தமல்லி - காஞ்சிபுரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள், காஞ்சிபுரம் செல்வதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும், பகுதிவாசிகள் திருவள்ளூர் சென்று, அதன்பின் காஞ்சிபுரம் செல்லும் நிலை இருப்பதால், பொருள் செலவு மற்றும் கால விரயம் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் திருவள்ளூரில் இருந்து கடம்பத்துார் வழியாக காஞ்சிபுரம் பகுதிக்கு இயக்கப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.